Saturday, October 25, 2008

பிரிட்டனில் பொருளாதார வீழ்ச்சி இன ரீதியான பதற்றத்திற்கு வழிவகுக்கும்

குடிவரவை கட்டுப்படுத்தாத பட்சத்தில், பொருளாதார வீழ்ச்சி இன ரீதியான பதற்றத்திற்கு வழிவகுக்குமென பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரொருவர் (எம்.பி.) அச்சம் தெரிவித்துள்ளார்.
பல்லின சமூகம் வாழும் பேர்மிங்ஹாம் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் றோகெர் கோட்சிவ் என்னும் எம்.பி.யே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டனில் வேலை வாய்ப்பின்மை வீதம் அதிகரிப்பதானது குறைந்தளவு வெளிநாட்டுத் தொழிலாளர்களே நாட்டிற்குத் தேவையென்பதை உணர்த்தியுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ் விவகாரத்தை முன்வைத்த றோகெர் கோட்சிவ் இவ் விடயத்தில் நாம் மிகக் கவனமாக இருப்போம். ஆனால் சமூகங்களுக்கிடையில் நிலவும் சிறந்த உறவை சீர்குலைக்கமாட்டோமெனத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர பிரிட்டனில் குடியுரிமையைப் பெறுவதற்காக போலித் திருமணங்கள் மூலம் நாட்டுக்குள் நுழையும் ஆண்களை நாடுகடத்த வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையை குடிவரவு அமைச்சர் பில் வூலஸ் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்தே பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் ஆரம்பமானது.
தஞ்சக் கோரிக்கைகளை நாம் சிறந்த முறையில் ஆராயாததன் மூலம் எமது சமூகங்களுக்கிடையில் பிளவுகளும் வெளிப்படுத்தப்படாத துயரங்களும் உருவாகியிருப்பதாக வூலஸ் தெரிவித்திருந்தார்.
ஆனால் வூலஸ் தனதுரையில் முன்னர் பதவியிலிருந்த கன்சவேடிவ் அரசாங்கத்தையும் தனக்கு முன்னர் குடியேற்ற அமைச்சராக பதவிவகித்த லியாம் பேர்னியையுமே குற்றஞ்சாட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தொகுதியில் பாகிஸ்தான், காஷ்மீர், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, யேமன், சோமாலியா மற்றும் ஆபிரிக்காவின் பல பகுதிகளைச் சேர்ந்த பல்லின, பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்வதாகத் தெரிவித்த கோட்சிவ் இந்த சிறப்பான நகரத்தில் சமூகங்களுக்கிடையில் நிலவும் உறவு சீர்குலையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மிகக் கவனமாக மேற்கொள்வோமெனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்லின கலாசாரங்களைக் கொண்ட இத் தொகுதியில் வேலைவாய்ப்பின்மை வீதம் அதிகரித்து வருவது சமூக ஒற்றுமைக்கு பாரிய அச்சுறுத்தலெனத் தெரிவித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகளையும் கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரிட்டன் ஆராய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருமணப் பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் இவ் விவாதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments: